Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமத்திவேலூர்: பரமத்தி அருகே, கீழ்ச்சாத்தம்பூரில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்... பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நாமக்கல் வேளாண்மை அலுவலர், மோகன், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்தும், கோவை வேளாண்மை பல்கலைகழகம், சிறப்பு அலுவலர், இயற்கை வள மேம்பாடு(ஓய்வு) இயக்குநர், முனைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கீழ்சாத்தம்பூர் தென்னை விவசாயி வேலுசாமி வயலில் ஆய்வு மேற்கொண்டதன் படி தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில் நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறையினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விளக்கமளித்தார்.
பின்னர், நிலக்கடலை விவசாயி பாலசுப்பரமணியன் வயலில் ஆய்வு மேற்கொண்டதன் படி ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு, ஜிப்சமிடல், குறித்தும் ஆமணக்கு விவசாயி கோவிந்தசாமி வயலில் ஆய்வு மேற்கொண்டதன் படி ஆமணக்கு பயிரில் ஒருங்கிணைந்த சாகுபடி, பயிர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, நுண்ணூட்டம் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியினை உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.